கருணாநிதி, ஜெயலலிதாவையே எதிர்த்தவர் ‘கேப்டன்’.. ரஜினிய பார்க்கமாட்டாரா.. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
தேர்தல் களத்தில் மறைந்த ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியையே எதிர்த்தவர் விஜயகாந்த். நடிகர் ரஜினியை எதிர்க்கமாட்டாரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா கூறியுள்ளார்.
சென்னை: தேர்தல் களத்தில் நடிகர் ரஜினியை சந்திக்க தயாராக விஜயகாந்த் இருக்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பேசுவதுதான் இப்போது சூடான செய்தி. அதுவும் வேறு மொழி பேசக் கூடிய ரஜினி எப்படி அரசியலுக்கு வரலாம் என சீமான் போன்றவர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த், யாரும் அரசியலுக்கு வரலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பேசியதாவது:
கன்னட ரஜினி
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. எப்போதெல்லாம் காவிரி பிரச்சனை எழுகிறதோ அப்போதேல்லாம் ரஜினி பற்றி பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அவரது மொழி குறித்து கூடுதலாக பேசுவார்கள்.
மலையாள எம்ஜிஆர்
தமிழகத்தை ஆண்ட எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே வேறுமொழி பேசியவர்கள்தான். இது எல்லோருக்கும் தெரியும். கருணாநிதியின் உண்மையான மொழி என்ன என்பது குறித்து கூட மாறுபட்ட கருத்து இருக்கிறது.
மொழி முதல்வருக்கான அடையாளமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை யார் தலைவராக வர வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மொழி மட்டுமே ஒரு முதல்வருக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியல் களத்தில் ரஜினியை எதிர்த்து…
அரசியல் களத்தில் ரஜினியை எதிர்க் கொள்ள விஜயகாந்த் தயாராக உள்ளார். 2005ல் கட்சியை தொடங்கியவர்கள் நாங்கள். ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியையே எதிர்த்தவர்கள். நாங்கள் யாரையும் பார்த்து பயப்பட மாட்டோம். யாரையும் எதிர் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நாங்கள் என்று பிரேமலதா கூறினார்.