பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு
இரு சமூகத்தினரிடையே மோதல் காரணமாக வன்முறை வெடித்துள்ளது.
Recommended Video
பெரியகுளம்: இறந்தவரின் உடலை கொண்டு செல்வதில், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரியகுளம் அருகே வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு தற்போது பதற்றநிலை உருவாகியுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள கிராமம் பொம்மிநாயக்கன்பட்டி. இங்கு கடந்த10 நாட்களுக்கு முன்பு வண்ணியம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது.
இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பிரச்சனை 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது. அதன்விளைவாக, இரு தரப்பினரும் இன்று காலை மாறி மாறி கார், ஆட்டோ, மற்றும் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த கலவரத்தில் இரு தரப்பிலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து பொம்மிநாயக்கன்பட்டி விரைந்து வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். அத்துடன் கலவரத்தில் காயமடைந்தவர்களை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போதுவரை அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.