தேர்தல் விதி மீறல் வழக்கு: திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நடிகை குயிலி வழக்கு ஒத்திவைப்பு!
நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் கோபால். இவருக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, திருத்துறைப்பூண்டியில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குயிலி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, புதிய பஸ் நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு, நகர் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் உதவி அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்புகாரின் அடிப்படையில், நடிகை குயிலி மற்றும் வீடு கட்டும் சங்கத் தலைவர் அன்பரசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குயிலி மற்றும் அன்பரசன் இருவரும் ஆஜராகாததால், வழக்கை வரும் ஜனவரி மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவா உத்தரவிட்டார்.