ஓட்டுக்கு பணம் தந்ததாக யாரும் கைது செய்யலையே.. முழு பூசணிக்காயை "தொப்பிக்குள்" மறைக்கும் தினகரன்!
ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை ஜோராய் செய்து வருகிறார் டிடிவி தினகரன்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொகுதி முழுவதும் பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று மாலை ஆர்.கே நகர் தொகுதியான தண்டையார் பேட்டையில் இருந்து டிடிவி தினகரன் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
டி.எச்.சாலை 3, 2-வது தெரு, இரட்டைக்குழலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, அண்ணா தெரு, ஜீவா தெரு, திலகர் நகர் சுனாமி குடியிருப்பு, இளைய முதலி தெரு, கைலாசம் தெரு, ஏ.பி.கார்டன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஆட்டோவில் சென்றவாறு தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
முழு பூசணிக்காய்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் விட்டில் இருந்த பணத்தை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர் என்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பதில் அளித்தார்.
பதில் கேள்வி
அதிமுக அம்மா கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாக மற்றக் கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு, ஒரு பொய்யை பத்து பேர் சேர்ந்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் திரும்பி கேள்வி கேட்டார்.
சூழ்ச்சி
தோல்வி பயத்தில் தன்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரம் செய்து வருகின்றன என்றும் தங்கள் வெற்றியை தடுக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று பாஜக தமிழிசை போன்றவர்கள் சூழ்ச்சி செய்கிறார் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
நல்ல பிள்ளை
சிபிம் மாநில செயலாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு, அதனை தேர்தல் கமிஷன் அதை பார்க்கட்டும் என்றும் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தாங்கள் கேட்போம் என்று ரொம்ப பவ்யமாக நல்ல பிள்ளை போல் பதில் அளித்தார்.
வேறு வேலை இல்லை
மக்களை சந்திக்காமல் பல அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் படிக்கட்டுகளில் காத்து கொண்டிருப்பதால், தேர்தல் ஆணையம் வேறு வழியில்லாமல் ஏராளமான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இருக்கிறது என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
நாடகம்
மேலும், தமிழகத்திலேயே தங்கள் இயக்கம் பெரிய இயக்கம் என்று மார் தட்டிக் கொண்ட டிடிவி தினகரன், யாரையும் அழைக்காமலேயே திருவிழா போல் ஆர்.கே. நகருக்குள் வந்து தொண்டர்கள் தங்கி இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் தங்களது செலவுக்கு வைத்து இருக்கும் தொகை எல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது என்று அப்பாவி போல் தினகரன் நாடகமாடுகிறார்.
ஃபெரா வழக்கு
ஃபெரா வழக்கில் ஆஜராவது குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எப்படி கோர்ட்டுக்கு செல்ல முடியும் என்றும் எதிர் கேள்வி எழுப்பிய தினகரன், 1996-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் போடப்பட்ட பொய்வழக்கு என்று கூறினார்.