காவிரி ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேறும் அபாயம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி நீர் பாயும் அணைகளும், ஆறுகளும் நிரம்பிவிட்டன.
இந்நிலையில் காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறுகையில், காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற வாய்ப்புள்ளது.
வரலாறு
இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது காவிரியாற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் சாதனை படைத்துள்ளது. காவிரியில் 1858, 1896, 1906, 1911, 1920, 1924, 1961, 1977, 1993, 2005 மற்றும் தற்போது 2018 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
கேஆர்எஸ் அணை
கடந்த 1924-ஆம் ஆண்டு காவிரியில் 4.5 லட்சம் கனஅடி நீர் வந்துள்ளது. இதுதான் இன்று வரை சாதனையாக உள்ளது. ஹாரங்கி அணையில் 34,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 25,000 கனஅடி நீர் வரத்தும், 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த 66000 கனஅடி நீர் கேஆர்எஸ் அணைக்கு செல்லும்.
மேட்டூர் அணைக்கு
அதுபோல் கேஆர்எஸ் அணைக்கு 1,23,000 கனஅடி நீர் வரத்தும் 1,23,000 கனஅடி நீர் வெளியேற்றமும், கபினி அணைக்கு 56,000 கனஅடி நீர் வரத்தும் 52000 கனஅடி வெளியேற்றமும், ஆக மொத்தம் 1,75,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது. இதன் அளவு மேலும் அதிகரிக்கும்.
காவிரிக்கு 2.45 லட்சம்
அதுபோல் மேட்டூர் அணைக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வரத்தும் அதே அளவு வெளியேற்றமும், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைக்கு 35,000 கனஅடி நீர் வரத்தும், அதே அளவுக்கு வெளியேற்றமும் , பவானி சாகர் அணைக்கு 40000 கனஅடி நீர் வரத்தும் 50000 கனஅடி நீர்வெளியேற்றமும் உள்ளன. மொத்தம் 2.45 லட்சம் கனஅடி நீர் காவிரிக்கு செல்கிறது.
மீண்டும் மழை
இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எர்ணாகுளம், திரிச்சூர், வால்பாறை பகுதிகளுக்கு மேல் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இடுக்கி நோக்கி செல்கிறது. இதனால் கேரளம் மற்றும் வால்பாறையில் இன்றும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.