காவிரி பிரச்சினை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின் ஆலோசனை
காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமியுடன் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த பிப்ரவரி16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 192 டிஎம்சி நீர், 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது.
நிலத்தடி நீர் இருப்பை காரணம் காட்டி, தமிழகத்துக்கு 14.75 டிஎம்சியை குறைத்த உச்ச நீதிமன்றம், அந்த நீரை கர்நாடகாவுக்கு வழங்கியது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
தமிழக அரசு கூட்டம்
இதை வரவேற்ற தமிழக முதல்வர், தண்ணீர் குறைப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், பிப்ரவரி 22ஆம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டதால், திமுகவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், மூத்த அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 39 அரசியல் கட்சிகள் 14 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேரில் சந்தித்து முறையிடுவது என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஸ்டாலினுக்கு அழைப்பு
இத்தீர்மானங்களை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றதுடன், விரைவில் பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்தின. இதனிடைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் கே.பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகம் வரும்படி அழைப்பு விடுத்தார்.
முதல்வருடன் ஆலோசனை
முதல்வரின் அழைப்பை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்துள்ளார். அவருடன் துரைமுருகனும் வந்துள்ளார். அப்போது, காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படாத நிலையில், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
காவிரி நதிநீர் பிரச்சினை ஆலோசனை
கர்நாடகாவில் வரும் 7ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்துள்ளது செயல்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.