‘காவிரி’ ரயில் மறியல்... நேற்று 1 லட்சம் பேர் கைது.. இன்றும் தொடர்கிறது போராட்டம்! #cauvery
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் தொடர்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
அதன்படி நேற்று காலை முதல் தமிழகத்தின் பல முக்கிய ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் உட்பட முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தின் முதல் நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் தொடர்கிறது. பல்வேறு இடங்களில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
நாகை அருகே இரண்டாவது நாளாகவும் கால்நடைகளை அழைத்து வந்து தண்டவாளத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.