காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனம்- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
திருச்சி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். காவிரி பிரச்சனையில் செயல்படவேண்டிய மத்திய அரசு செயல்படாமல் உள்ளது என திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று காலை 9 மணிக்கு காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரி ஆனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம் மற்றும் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், திருச்சி மாவட்ட தலைவர்கள் ஆர்.சி.பாபு (தெற்கு), ஜெயப்பிரகாஷ் (வடக்கு) மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
விவசாயம் பாதித்த பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசிய திருநாவுக்கரசர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி பிரச்சனையில் செயல்படவேண்டிய மத்திய அரசு செயல்படாமல் உள்ளது எனவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்றதும் அவரது தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் இது என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரது ஆதரவாளர்கள் நேற்றே திருச்சி வந்து சேர்ந்தனர். இந்த போராட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்க திருச்சி செல்லவில்லை. தி.க. தலைவர் கி.வீரமணி உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் வந்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காவிரி பிரச்சனையில் சட்டரீதியாக தீர்வை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தும் மத்திய அரசு முன்வராமல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், சட்ட மன்றத்தை உடனடியாக கூட்டுவது தொடர்பாகவும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்து வழங்கியுள்ளார்.
தி.மு.க. தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இது தொடர்பாக தி.மு.க. டெல்லிக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்தால் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். காங்கிரஸ் அ.தி.மு.க.வை நெருங்குவதாக கூற முடியாது. மருத்துவமனை வரை சென்று சந்தித்ததை வைத்து இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது என்றார். உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது விவசாயிகளும் பங்கேற்றனர்.