தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: பெற்றோர், சாட்சிகளிடம் சிபிசிஐடி விசாரணை
நாமக்கல்: தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெற்றோரிடமும், திருச்செங்கோட்டில் முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். கடந்த ஜூன் 24ம் தேதியன்று அவரது சடலத்தை மீட்ட திருச்செங்கோடு போலீஸார், தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக இருந்து வந்தார். இந்த வழக்கில் சிலரை கைது செய்ததுடன், தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையையும், கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், நேற்று ஓமலூரில் உள்ள அவரது உறவினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு மறுப்பு
கடந்த திங்கள்கிழமை ஓமலூரில் உள்ள கோகுல்ராஜ் வீட்டுக்கு சிபிசிஐடி உதவி ஆய்வாளர் மோகன், கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவரது அண்ணன் கலையரசன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர்களை சிபிசிஐடி கண்காணிப்பாளர் நாகஜோதி முன் விசாரணைக்கு நாமக்கல் வருமாறும் அழைத்தார். ஆனால், அவர்கள் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாள்களுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் கூறி, அனுப்பிவிட்டனர்.
பெற்றோரிடம் விசாரணை
இந்த நிலையில், சிபிசிஐடி ஏடி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் கோகுல்ராஜ் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்தனர். தொடர்ந்து ஏடி.எஸ்.பி ஸ்டாலின் கோகுல்ராஜின் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோரிடம் விசாரணை செய்தார். விசாரணை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது.
கோகுல்ராஜ் குடும்பம்
கோகுல்ராஜ் படிப்பு முடித்து என்ன செய்தார், எங்கெங்கு செல்வார், படிப்பு முடித்த பிறகும் கல்லூரிப் பேருந்தில் எதற்காகச் சென்று வந்தார், அவரது நண்பர்கள் யார் யார், அவரது தொலைபேசி எண், அவரது பழக்க வழக்கங்கள் குறித்து விசாரித்ததாகத் தெரியவருகிறது. இந்த விசாரணை சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
19 பேர் கைது
இன்று திருசெங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது-
சி.பி.ஐ விசாரணை தேவை
இதனிடையே திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திருச்செங்கோடு தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மனு அளித்தனர்.