இவர்கள்தான் இந்து முன்னணி சசிக்குமாரை கொன்றார்களா..?
கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கொலை தொடர்பாக புதிய சிசிடிவி படத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள நபர்கள் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவையில் பெரும் வன்முறையும் கலவரமும் வெடித்தது. இதில் பொதுச் சொத்துக்கள், தனியார்சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இந்த நிலையில் இந்தக் கொலை குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சில துப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. கொலை நடந்த அன்று கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜர அலுவலகத்தில் இருந்து சசிகுமார் மொபட்டில் தனது வீடு அமைந்துள்ள சுப்பிரமணியபாளையத்துக்கு சென்றுள்ளார்.
கொலை நடந்த இடத்திலிருந்து இந்த இடம் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆராய்ந்து பார்த்தபோது அதில் பதிவான நான்கு வாலிபர்கள் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் சசிக்குமாரை பின் தொடர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.
இவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையை முடுக்க விட்டுள்ளனர். இவர்களின் படத்தையும் சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.இவர்கள் குறித்த தகவல் தெரிந்தோர், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். வளாகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவை அணுகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு செல்போன் மூலம் சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் 9498104441 என்ற மொபைல் எண்ணில் தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.