குறுக்க வராதீங்க.. எங்கயாவது பார்த்தா அவ்ளோதான்.. கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பாக சிபிசிஐடி வார்னிங்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனி நபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணை செய்யக்கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புலன் விசாரணை என்ற பெயரில் பலரும் அப்பகுதியில் விசாரித்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதிரடி கைது
மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகவும் பலர் கைது செய்யப்பட்டனர். கலவரம் தூண்டப்பட்டது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல்வேறு வீடியோக்கள்
இதற்கிடையே மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பறையில் அவர் நடந்து செல்லும் வீடியோ என ஒரு காட்சி முதலில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோ என ஒன்று வெளிவந்தது. சமீபத்தில் மாணவி இறந்ததற்கு பிறகு பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்லும் காட்சி என ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வீடியோக்கள் போலியானவை எனக் கூறப்படுகின்றன.

சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் மாணவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் புலன் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரும் விசாரணை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விசாரணை செய்து இணையதளங்களில் அல்லது யூடியூப் சேனலில் பதிவு செய்தால் அந்த சேனல்கள் மூடப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேனல் முடக்கப்படும்
நீதியை நிலைநாட்டுவதற்கு நியாயமான புலன் விசாரணை மேற்கொள்ள அனைவரும் சிபிசிஐடி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரித்துள்ளது. தங்களது விசாரணை பாதிக்கும் வகையில் புலன் விசாரணை மேற்கொண்டால் அவர்களது வலைதள பக்கம் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

அறிவுறுத்தல்
மேலும் இவ்வழக்கில் ஏதேனும் தகவல் கிடைத்தால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குறித்து யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை சிபிசிஐடி உயர் அதிகாரிகளின் 90038 48126 என்ற அலைபேசி எண்ணுக்கு நேரடியாக பகிரும்படி கேட்டுக்கொள்வதாக சிபிசிஐடி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications