வங்கிப் பணம் ரூ.65 கோடி மோசடி.. சென்னை, கோவையில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு
எஸ்.பி.ஐ. வங்கியில் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை, சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் வங்கிப் பணம் ரூ.65 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த அசோக், பாலாஜி, நாகேந்திரன், மனோகரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் 65 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி செலுத்தாதால் அவர்கள் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.,க்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் கோவை பெரிய கடை வீதியில் உள்ள அசோக்குமார் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை, கோவையில் உள்ள 5 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அசோக், பாலாஜி, நாகேந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.