சேகர் ரெட்டிக்கு ரூ.2000 நோட்டுகள் தந்த வங்கி அதிகாரிகள் யாரும் கைது இல்லை ஏன்? ஹைகோர்ட் சுளீர்
சேகர் ரெட்டிக்கு பல கோடி ரூபாய் 2,000 நோட்டுகளை வாரி கொடுத்த வங்கி அதிகாரிகள் சிக்குகிறார்கள். இந்த அதிகாரிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்பது சிபிஐ கோர்ட் கேள்வி.
சென்னை: போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கம் சிக்கியது. ரூ131 கோடியில் ரூ34 கோடி புதிய ரூ2,000 நோட்டுகளாகும்.
இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது சென்னை சிபிஐ கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி வெங்கடாசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இவ்வளவு எப்படி கிடைத்தது?
ரூபாய் நோட்டுகளின் எண்களை குறிப்பிட்டு தான் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு விநியோகம் செய்யும். அப்படியானால் யார் யாருக்கு? யார் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது? என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
வங்கி உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் சேகர் ரெட்டி போன்றோருக்கு பல கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கிடைத்திருக்காது. அவர்களை இதுவரை கைது செய்யப்படவில்லையே ஏன்? அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். சேகர் ரெட்டி உள்ளிட்டோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதிக்கிறேன் என்றார்.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 நாட்களுக்குள் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் பெயர் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனால் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி உயர் அதிகாரிகளும் விரைவில் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.