குட்கா வழக்கில் மாதவராவ், சீனிவாசராவிற்கு சிபிஐ காவல் நீடிப்பு
சென்னை: குட்கா வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக, ஆலை உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்றுடன் ஐந்து பேரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில், மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரின் காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு கோர்ட், மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகிய இருவரின் காவலை மேலும் 3 நாள் நீட்டித்ததுடன், திங்கட்கிழமை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
மாதவராவுக்கு சொந்தமான குட்கா ஆலையில் சிபிஐ நடத்திய சோதனையில் 53 இயந்திரங்கள், டன் கணக்கில் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தனது மனுவில் தகவல் தெரிவித்திருந்தது.