தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. ஹைகோர்ட் மீண்டும் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது, இதனால் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது, இதனால் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு நடந்த பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு முன்னிலையில் இன்று நடந்தது. ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு முறை விசாரணைக்கு வந்த போதும், ஏன் இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க கூடாது என்று நீதிபதிகள் கேட்டு இருந்தனர். இப்போதும் அதே கேள்வியை அவர்கள் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், தூத்துக்குடி சம்பவத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அங்கு என்ன நடந்தது என்று எனக்கும் தெரியும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது. இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது. அப்போதுதான் சரியாக விசாரணை நடக்கும். சுதந்திர, நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமானால் சிபிஐக்கு பரிந்துரைக்கலாமே என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது என்று கூறினார். ஆனால் மனுதாரர் தரப்பு, விசாரணை ஆணையம் நேர்மையாக்கி செயல்படாது, அரசு இன்னும் இறந்த நபர்களில் 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையையே கொடுக்கவில்லை, என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து எழுத்துபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வாய்மொழியாக, சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். இதனால் அடுத்த வழக்கு விசாரணையில் இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.