ஆ.ராசா குடும்பத்தில் 17 பேர் மீது பாய்ந்த சொத்து குவிப்பு வழக்கு! சாதிக் பாட்சா மனைவியும் சேர்ப்பு!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 17 பேர் மீது சி.பி.ஐ. சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டவரான சாதிக் பாட்சாவின் மனைவி ரேஹா பானுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
2007-இல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஆ.ராசா, ராஜ்யசபா தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் வாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஆ.ராசா மீது அவர் 1999-2010ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக சி.பி.ஐ. புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆ. ராசாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 17 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
யார் யார் மீது?
ஆ. ராசா மனைவி பரமேஸ்வரி, அக்கா மகன் பரமேஷ்குமார், சி. கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் சத்யநாராயணன், ராசாவின் சகோதரர் கலியபெருமாள், பரமேஷ்குமாரின் மனைவி கலா, ரேஹா பானு, சுப்புடு, பெரம்பலூரைச் சேர்ந்த ஆர். பச்சமுத்து, சென்னையைச் சேர்ந்த புவனேஸ்வரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி, பெரம்பலூரைச் சேர்ந்த செல்வகுமாரி, ராமச்சந்திர கணேஷ், மலர்விழி ராம், ஏ.எம். ஜமால், க்ரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனம் ஆகிய 17 பேருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
சாதிக் பாட்சா மனைவி
இவர்களில் ரேஹா பானு, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்டவரும் ஆ. ராசாவின் மிக நெருங்கிய நண்பருமான சாதிக் பாட்சாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில்..
இதைத்தொடர்ந்து ஆ. ராசா வசித்து வரும் டெல்லி குல்மொஹர் பார்க் பகுதியில் உள்ள வாடகை பங்களா, சென்னையில் அவர் வசித்து வரும் ஆர்.ஏ.புரம் வீடு உள்பட 6 இடங்கள், கோவையில் 2, பெரம்பலூரில் 8, திருச்சியில் 3 என மொத்தம் 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனை விவரத்தை தமிழக காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்து நேற்று காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நடத்தினர். டெல்லியில் இரவு 9 மணி வரை இச்சோதனை நீடித்தது.
பெரம்பலூரில் 8 இடங்கள்
ஆ. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு, சகோதரர் கலியபெருமாளின் வீடு, அவருக்குச் சொந்தமான சிவகாமம் ஏஜென்சீஸ், சாதிக் பாட்சாவின் மனைவி ரேஹா பானு வசித்து வரும் வீடு, திருநகரில் உள்ள கே. செல்வகுமாரியின் வீடு, நண்பர்கள் சுப்புடு, ஆர். பச்சமுத்து ஆகியோரின் வீடுகள், க்ரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பரமேஷ்குமார் மனைவி கலா வசித்து வரும் வீடு ஆகிய 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினர்.
சாதிக் பாட்சா வீட்டில்...
சாதிக் பாட்சா மனைவி வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது அங்குள்ள அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த அறையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் 6 இடங்கள்
சென்னையில் ஆ.ராசா தங்கும் ஆழ்வார்பேட்டை வீடு, தி.நகர் ராமாராவ் சாலையில் உள்ள க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர்களின் இரண்டு வீடுகள், தேனாம்பேட்டையில் உள்ள நண்பர்களின் இரு வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை, திருச்சி
கோவையில் ஆ. ராசாவுக்குச் சொந்தமான விருந்தினர் இல்லம் உள்பட 2 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி திருவானைக்கா சிவராம் நகரில் ஆ.ராசாவின் சகோதர் ராமச்சந்திரன் வீடு, அவரது கார் ஓட்டுநர் ரவி, ராசாவின் சகோதரி மகன் வெங்கடேசன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைகளின்போது பல்வேறு நிலங்கள், கட்டடங்கள் வாங்கியதற்கான பத்திரங்கள், வருமான வரி ரசீதுகள், 20 வங்கிக்கணக்குகளின் ஆவணங்கள், வைப்பு நிதி கணக்கு ஆவணங்கள், தனியார் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.