மழை பாதிப்பு.. குமரி, நெல்லை மாவட்டங்களில் சில நிமிடமே ஆய்வு செய்த மத்திய குழு
கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்ட மத்தியக்குழுவினர் சில நிமிடங்களில் ஆய்வை முடித்துக்கொண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : ஓகி புயல் சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்ய நேற்று முன்தினம் வந்த மத்தியக்குழுவினர் இன்று சென்னை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வை சில நிமிடங்களிலே அதிகாரிகள் முடித்துக்கொண்டது மக்களிடத்திலே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஓகி புயலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 25லட்சம் ரூபாய் மற்றும் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதேபோல ஓகி புயலில் மாயமாய் போனவர்கள் இனிமேல் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாததால், அவர்களையும் இறந்தவர்களாகவே கருதி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் வெறும் நான்கு இடங்களில் மட்டும் சில நிமிடங்கள் வரை ஆய்வை முடித்துக்கொண்ட அதிகாரிகள் அடுத்த இடத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள், சில நொடிகளில் ஓகி புயலின் கோரத்தாண்டவம் தொடர்பான சேதங்களை எப்படி கணக்கிட முடியும் என கேள்வி எழுப்பினர். புயலின் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் உள்ளிட்ட சில இடங்களை மட்டும் பார்வையிட்ட அவர்கள், இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவுள்ளனர்.
வழக்கம்போல ஆய்வுக்கு என்று வரும் மத்தியக்குழு இழப்பீட்டு தொகையை பெருமளவு குறைத்து கொடுப்பது போல தான் இந்த முறையும் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜகவைவிட நோட்டோவுக்கு அதிக வாக்குகள் விழுந்ததை மத்திய அரசு அவ்வளவு எளிதில் மறந்திருக்குமா என்ன?












Click it and Unblock the Notifications