கீழடி 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி - ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வினை மேற்கொள்ள மத்திய அரசு தொல்லியல் துறைக்கும் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வினை மேற்கொள்ள மத்திய அரசு தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது
மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் என இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த ஆய்வில் பண்டைத் தமிழர்களின் சங்ககால வாழ்வியலை முழுவதுமாக வெளிக்கொணர முடிந்தது.
இரண்டாம் கட்ட அகழாய்வில் மிகப் பெரிய நெசவுத் தொழிற்கூடம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது கண்டறியப்பட்டது. ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இந்த ஆய்வின் மூலம் இந்திய வரலாறு குறிப்பாக தமிழக வரலாற்றுத் தொன்மை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன. தமிழறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கீழடிக்கு வந்து அகழ்வாராய்ச்சியை பார்த்தனர்.
இதனால் ஆய்வு மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்தால் மேலும் பல வரலாற்று உண்மைகளும், பண்டைய நாகரிகமும் அறிய வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது. மூன்றாம் கட்ட அகழாய்விற்கு கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசின் அனுமதி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தாமதம் ஏற்படவே, தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கீழடி மூன்றாம் அகழாய்வு தொடங்கப்பட வேண்டும் என்று அறிக்கைகள் வாயிலாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் பல்வேறு தரப்பிலும் கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வினை மேற்கொள்ள மத்திய அரசு தொல்லியல் துறைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தவுடன் எங்களது ஆய்வு தொடங்கும் என்று தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொல்லியல் துறை பெங்களூரு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா,மூன்றாம் கட்ட அகழாய்வில் மேலும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். இந்திய மற்றும் தமிழக அகழாய்வில் கீழடி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை பெற்றுவிட்டது என்று கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசின் அனுமதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் 5000 பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அகழ்வாராய்ச்சி தொடர அனுமதித்தால் தமிழர்களின் தொன்மையான வரலாறு தெரிய வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.