7 மாநிலங்களுக்கு 'திடீரென' வறட்சி நிவாரண நிதி- தமிழகத்துக்கு ரூ.1774 கோடி....
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு திடீரென வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.1773.78 கோடியை மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களை பெருமழை வெள்ளம் புரட்டிப் போட்டது. இந்த வெள்ள நிவாரண சீரமைப்புப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.
இந்நிலையில் திடீரென தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி தமிழகத்துக்கு ரூ. 1,773.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானுக்கு ரூ. 1,177.59 கோடி, ஜார்க்கண்ட்டுக்கு ரூ. 336.94 கோடி, அஸ்ஸாமுக்கு ரூ. 332.57 கோடி, ஆந்திராவுக்கு ரூ. 280.19 கோடி, ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ.170.19 கோடி மற்றும் நாகாலாந்துக்கு ரூ. 16.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.