வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி போதாது: வைகோ
காஞ்சிபுரம்: தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி போதாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. சென்னையில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இரும்புலிச்சேரி கிராமத்திற்கு சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிவாரணப் பொருட்களை வழங்கினார். வெள்ளத்தால் தனித்தீவாகியுள்ள அந்த கிராமத்திற்கு வைகோ படகில் சென்றார். அவருடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான திருமாவளவன், முத்தரசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
மக்களுக்கு அவர்கள் நிவாரணப் பொருட்களை அளித்துவிட்டு ஆறுதல் கூறினர். அதன் பிறகு வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.1, 940 கோடி அளித்துள்ளது போதாது. மாறாக ரூ.1 லட்சம் கோடி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.1.5 லட்சமும் நிவாரணமாக அளிக்க வேண்டும்.
மேலும் சேதம் அடைந்துள்ள வீட்டுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடு, மாடுகள் பலியானதற்கு ரூ.50 ஆயிரமும், ரூ.5 ஆயிரமும் அளிக்க வேண்டும் என்றார்.