சென்னை விமான நிலையங்கள் 8ம் தேதிவரை செயல்படாது: இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு
சென்னை : சென்னை விமான நிலையத்தில் டிசம்பர்8ம் தேதி வரை பயணிகள் விமான சேவை இல்லை என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. விமானங்களுக்குள் பாம்புகள் இருப்பதாகவும் அவற்றை வெளியேற்றிய பின்னரே விமான சேவை சீரடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. டிசம்பர் 6ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாற்று ஏற்பாடாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் தற்காலிகமாக இயக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது. அதன்படி ராஜாளி விமான தளத்தில் பயணிகள் விமானம் வந்து செல்லும் வகையில் பணி முழுவீச்சில் நடைபெற்றது. நேற்று காலை இந்த விமான தளம் தயார் நிலைக்கு வந்தது. பயணிகள் விமானமும், ராணுவ விமானமும் இந்த விமான தளத்திற்கு வந்து செல்லத் தொடங்கியுள்ளன.
இதனிடையே சென்னை விமான நிலையங்கள் டிசம்பர் 6ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில ஊடகங்களில் இன்றும் முதல் விமானங்கள் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமான பயணிகள் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு தயாராக வந்தனர். ஆனால் விமானங்கள் இயக்கப்படாத காரணத்தால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா,
கடந்த வாரம் பெய்த கனமழையில் சென்னை மாநகரமே நிலைகுலைந்து விட்டது. ஆங்காங்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. விமான நிலைய வளாகம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாற்காலிகமாக விமானசேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது. எனினும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. எனவே, மின்விநியோகம் சீரடைந்த பின்னர் மேலும் 2 நாட்களில் சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
விமானங்களுக்குள் பாம்புகள்
இதனிடையே கனமழையால் விமான ஓடுதளங்களில் வெள்ளம் புகுந்ததை அடுத்து கடந்த 2ம் தேதியில் இருந்து விமான நிலையம் மூடப்பட்டது. எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இதனால் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாம்புகள் விமானத்திற்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாம்புகளை வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே விமானங்கள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் டிசம்பர்8ம் தேதி வரை பயணிகள் விமான சேவை இல்லை என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.