குண்டு வெடிப்பில் பலியான ஸ்வாதியின் உடல் சொந்த ஊரில் தகனம்
சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான ஸ்வாதியின் உடல் வியாழக் கிழமை இரவு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் அவரது சொந்த ஊரில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஸ்வாதி என்னும் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொறியியல் பட்டதாரி
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பெங்களூருவில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

குண்டு வெடிப்பில் மரணம்
அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், பணிக்குச் சேர்ந்த பின்னர் முதன்முறையாக ஒருவார விடுப்பில் தனது ஊருக்கு செல்லும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஸ்வாதி உயிரிழந்தார்.

பெற்றோர் வருகை
அவரது உடலைப் பெறுவதற்காக, வியாழக்கிழமை மாலையில் தந்தை ராமகிருஷ்ணனும், தாயார் காமாட்சி தேவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு
மருத்துவமனை பிண வறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்வாதியின் உடலை பார்த்து அவர்கள் கதறியழுதனர். இதைக் கண்ட பொதுமக்களும் கண்கலங்கினார்கள். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஸ்வாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று இறுதிச்சடங்கு
மணக்கோலம் காண சில தினங்களே இருந்த நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர் துக்கத்தில் கதறி அழுதனர். பின்னர், ஸ்வாதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூரை அடுத்த ஸ்ரீ நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகலில் தகனம் செய்யப்பட்டது.

பயிற்சிக்குப் பின் வேலை
பொறியியல் பட்டப் படிப்பு முடித்ததுமே வேலை கிடைத்ததால் ஸ்வாதி, திருவனந்தபுரத்தில் 3 மாதப் பயிற்சி முடிந்து, பெங்களூரில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

பாட்டிக்குப் பரிசு
முதல் மாத ஊதியத்தில் தனது பாட்டிக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு திருமணக் கனவுகளுடன் புறப்பட்ட ஸ்வாதியின் முடிவு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும்.












Click it and Unblock the Notifications