சென்னைவாசிகளை வாட்டும் வாடைக்காற்று! கடும்குளிர்!
சென்னை: சென்னையில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் சில்லென்ற காற்று வீசுகிறது. இரவு நேரங்களிலோ வாடைக்காற்றும், சில நேரங்களில் கடுங்குளிரும் வீசுகிறது.
சென்னையில் ஜனவரி மாதத்தில் பனியும், குளிரும் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பனியும் குளிரும் குறைவாக இருந்தது. பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு இரவிலும், காலையிலும் கடுமையான குளிர் நிலவுகிறது.
பகலில் நன்றாக வெயிலடித்தாலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. மாலை நேரத்தில் குளிர் காற்று அதிகம் வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை.
நடுங்கும் நகரவாசிகள்
பஸ், கார் போன்ற வாகனங்களில் செல்வோரும் நடுங்கும் குளிரை உணருகின்றனர். இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் கடும் குளிரால் வயதானவர்கள், குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன.
வானிலை ஆய்வு மையம்
இதுகுறித்து கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், சென்னையில் கடும் குளிர் இருப்பதற்கு விசேஷமான காரணம் எதுவும் இல்லை. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால் குளிர் அதிகமாக இருக்கும் என்றார்.
வாடைக்காற்று
குளிர்ந்த காற்று நிலப்பகுதிக்கு வருவதாலும் வடக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும் இத்தகைய சூழல் காணப்படுகிறது என்றார்.
குறைந்த வெப்பநிலை
மேலும் சென்னையில் பிப்ரவரி மாதத்தின் முதல் 5 நாட்கள் சராசரி வெப்ப நிலை 21.6. டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். ஆனால் நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் நேற்று 20.0 செல்சியஸ் ஆகவும், மீனம்பாக்கத்தில் 18.7 செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.