விஐபி அரசியல்வாதியின் மகன் மீது பரபரப்பு கடத்தல் புகார்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவரின் மகன் மீது ஒரு கடத்தல் புகார் கிளம்பியுள்ளது. ஆனால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னையும், தனது டீன் ஏஜ் மகளையும் யாரும் கடத்தவில்லை என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் வெள்ளிவலா என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தனது மனைவி சௌமியா மற்றும் மைனர் மகள் நைஷாவை வெற்றி என்பவர் கடத்தி வைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் மதிவாணன், அவர்கள் இருவரையும் வரும் 22ம் தேதி நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சௌமியாவே தனது மகளுடன் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தானும் தன் மகளும் தங்களது பெற்றோருடன் சென்னையில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் அவர் கூறுகையில், தான் ராஜமுந்திரி நீதிமன்றத்தில் ராகேஷிடம் இருந்து விவாகரத்து வேண்டி மனு செய்துள்ளதாகவும், இதனால் தன்னைப் பழிவாங்குவதற்காக இவ்வாறு ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் தாக்கல் செய்துள்ளாதகவும் செளமியா கூறியுள்ளார்.
புகாருக்குள்ளாகியுள்ள வெற்றி, சென்னையைச் சேர்ந்த மிக முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரின் மகன் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.