சென்னை ஐடி ஊழியர்களின் (உண்மை) நிலை இதுதான்... இவங்க எப்படி ஓட்டுப் போட முடியும்??
சென்னை: சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஓட்டுப் போட மெனக்கெடில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் லீவு விடவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
ஆனால் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருக்கும் அவர்களை சற்று கிட்டப் போய்ப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குத் தெரிய வரும்.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பலரும் வெளியூர்க்காரர்கள், வெளி மாநிலத்தவர்தான். சென்னைக்காரர்கள் என்று பார்த்தால் கை மற்றும் கால் விரல்களை விட்டு எண்ணி விடும் அளவில்தான் இருப்பார்கள்.
இவர்களில் பலரும் முறையான வாக்காளர் அடையாள அட்டை, ஏன் ரேஷன் கார்டு கூட இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே இவர்களால் நினைத்தாலும் கூட சென்னையில் ஓட்டுப் போட முடியாது.
தென் சென்னையில்தான் குறைந்த வாக்குப் பதிவு
சென்னையில் மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் தென் சென்னையில்தான் தமிழகத்திலேயே குறைந்த வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது நிச்சயம் பெரும் வேதனைக்குரிய விஷயம்.
செழிப்பான, வளர்ச்சியான, படித்தவர் நிரம்பிய தொகுதி
சென்னையிலேயே தென் சென்னையில் தான் எலைட் கோஷ்டியினர் அதிகம். படித்தவர்கள் அதிகம். பணக்காரர்கள் அதிகம். ஆனால் இப்படிப்பட்டவர்கள்தான் பலரும் ஓட்டுப் போட வராமல் டிவி பார்த்தும், வெளியிடங்களுக்குப் போய் பொழுது போக்கியும், மால்களுக்குப் போய் வேடிக்கை பார்த்தும் தேர்தல் லீவை என்ஜாய் செய்துள்ளனர்... எல்லோரும் அல்ல, பலரும்.
ஐடி ஊழியர்களால் அல்ல..
எனவே ஐடி ஊழியர்களை ஆயிரக்கணக்கில் ஓடடுப் போட விடாமல் நிறுவனங்கள் தடுத்து விட்டதாக குறை கூறுவது நிச்சயம் நியாயமானதாக இருக்க முடியாது. காரணம், அங்கு ஓட்டுப் போடுவதற்கான முறையான ஆவணங்களை வைத்திருப்போர் நிச்சயம் நூற்றுக்கணக்கில்தான் இருப்பார்கள்.
அட்ரஸ் புரூப் கூட கிடையாது
சென்னை ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் முறையான முகவரி அடையாளம் கிடையாது. காரணம், ஆபீஸ் ஐடி கார்டே உலகம் என்ற அளவில்தான் பலரும் உள்ளதால்.
ரேஷன் கார்டு கிடையாது
மேலும் பலருக்கும் ரேஷன் கார்டு கிடையாது. வாக்காளர் அடையாள அட்டை இருக்காது.
''Whom so ever it may concern''.. அம்புட்டுத்தான்...
''Whom soever it may concern'' என்ற 'எச்.ஆர். மேனேஜர் ரமேஷ்' தரும் லெட்டரை வச்சுத் தான் பல மகேஷ், சுரேஷ்கள் டூ வீலர் லோனே வாங்குகிறார்கள். இந்த லெட்டரைத் தான் வங்கியில் பர்சனல் லோன், வீட்டு லோனுக்குக் கூட யூஸ் பண்றாங்கப்பா... (இந்த லெட்டரைக் கொடுக்க எச்.ஆர். பண்ற அலப்பறைகள் தனிக் கதை. ''உங்க ஹவுஸ் ஓனர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வா, அயர்ன்காரர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வா... தர்றேன்'')
மத்த சென்னைகளுக்கு என்னக் கஷ்டம்...
எனவே ஐடி நிறுவன ஊழியர்களை ஏய்யா நீங்கள்லாம் ஓட்டுப் போடவில்லை என்று குத்திக் குடைவதில் பெரிய அளவில் நியாயம் இருக்க முடியாதுதான்.. ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள மற்ற சென்னைவாசிகளுக்கு என்னவாச்சு என்பதுதான் கொடுமையானது.
3 சென்னை தொகுதி வாக்குப்பதிவு சொல்வது என்ன..
மொத்த சென்னையிலும் மொத்தமாக 61.3 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர். அட, பின் தங்கி கஷ்டப்படுகிற தர்மபுரியில் கூட 80 சதவீதத்திற்கும் மேல் வாக்களித்துள்ளனரே.. மெத்தப் படித்த மெட்ராஸ்காரர்களுக்கு 'இன்னாபா' ஆச்சு...
இவ்வளவுதானாப்பா உங்க டக்கு...??
தென் சென்னையில் வெறும் 57.86 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர். மத்திய சென்னையில் 60.9 சதவீதம் பேரும், வட சென்னையில் 64.63 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
புறநகர்கள் பரவாயில்லையே...
அதேசமயம், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் தொகுதியில் 74.75 சதவீதம் பேரும், காஞ்சிபுரத்தில் 64.08 சதவீதம் பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 61.19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
2009 ஆண்டை விட மோசம்
2009 தேர்தலில் தென் சென்னையில் 62.66 சதவீதம் பேரும், மத்திய சென்னையில் 61.03 சதவீதம் பேரும், வட சென்னையில் 64.91 சதவீதம் பேரும் வாக்களித்தனர். கடந்த தேர்தலிலும் சரி, இந்த தேர்தலிலும் சரி முக்கால்வாசி சென்னை வாக்காளர்கள் கூட வாக்களிக்கவில்லை.
கோவை, மதுரைக்கும் என்னாச்சு...
அதேபோல கோவை, மதுரை, திருச்சி ஆகிய 2ம் நிலை நகரங்களிலும் கூட வாக்குப்பதிவு சரியில்லை. குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது.
கார் ஒரு காரணமா..??
இதற்கு காரை ஒரு முக்கியக் காரணமாகக் கூட கூறலாம். காரணம், சென்னை முதல் குமரி வரை இன்று கார் வைத்திருப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விட்டது. லீவு கிடைத்தால் போதும், காரை எடுத்துக் கொண்டு எங்காவது போகத்தான் பலருக்கும் தோன்றுகிறது. எனவே வியாழக்கிழமை கிடைத்த லீவோடு, வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் சி.எல். அப்ளை செய்துவிட்டு 4 நாட்கள் மொத்தமாகக் கிடைக்க காரை எடுத்துக் கொண்டு பலரும் குழந்தை குட்டியோடு டூர் கிளம்பியிருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
நடிகர்களை கிண்டல் பண்ணாதீங்கப்பா.. இனியும்
பலரும் நடிகர், நடிகையரைக் கிண்டலடிப்பார்கள். ஆனால் காலில் அடிபட்டிருந்தும் கூட வாக்களிக்க வந்த சூர்யா, முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்டு விட்டு சிங்கம் போல பறந்த ரஜினி காந்த், எனக்கு இந்தியாவே வேண்டாம் என்று ஒருமுறை கோபத்தில் கூறிய கமல்ஹாசன் என திரைத்துறையினர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததைப் பார்க்கும்போது சினிமாக்காரர்களை நாம் கையில் இங்கிலீஷ் பேப்பர், வாயில் ப்ரூ காபி.. மேசை முன் லேப்டாப்.. சகிதம் உட்கார்ந்து இகழ்ச்சியுடன் பேசுவதும், பார்ப்பதும் மகா தப்பு என்றுதான் தோன்றுகிறது.
ஒரு வேளை இப்படி இருக்குமோ...
ஒரு வேளை நேற்று கிடைத்த லீவுடன், இன்று ஒரு நாள் லீவு போட்டால் அடுத்து சனி, ஞாயிறு என மேலும் 2 நாட்கள் ஆக மொத்தம் நாலு நாள் லீவு.. சியர்ஸ் என்று பலரும் முடிவெடுத்து, ஊர்ல போயி பழைய துணியை வாஷ் பண்ணி அயர்ன் பண்ணி எடுத்துட்டு திங்கள்கிழமை காலையில மெட்ராஸ் வந்து இறங்கிறலாம்னு ஊரப் பக்கம் பழைய துணிமணியோட ஓடிட்டாங்களோ என்றும் தோன்றுகிறது.
பொறுப்பான புள்ளைகளும் இருக்கே
ஆனால் இளம் தலைமுறை ஐடி ஊழியர்களும் இளம் ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமைக்கு நிறையவே நேற்று மரியாதை கொடுத்துள்ளனர். அதையும் நாம் மறுக்க முடியாது.
ஒரே மாதிரி டிரஸ்ஸில் வந்து...
கல்லூரியில் படிக்கும்போது ஒரே மாதிரியாக டிரஸ் போட்டு ஜாலியாக போவது போல நேற்று பல இடங்களில் இளம் வாக்காளர்கள், நிறைய பொம்பளைப் புள்ளைங்க,, மான் குட்டிகள் போல துள்ளியபடி ஜாலியாக வந்து பெருமையுடனும், சந்தோஷத்துடனும் வாக்களித்ததைப் பார்க்க முடிந்தது. ஓட்டுப் போட்டதும் அந்த இளசுகளுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம், ஜாலி.. உற்சாகம்.. பேஸ்புக் செல்ஃபிகளைப் பார்த்தாலே தெரிஞ்சுக்கலாமே..
நங்கநல்லூர் ஐஸ்வர்யா சொல்றதைக் கேளுங்க...
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரி மாணவி. தனது அப்பா, அம்மாவுடன் போய் வாக்களித்து விட்டு வந்துள்ளார் இந்த முதல் முறை வாக்காளர். எக்ஸைட்டிங்காக, பெருமையாக இருக்கிறது என்கிறார். இவர் மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறை வாக்காளர். இவர் யார் தலையெழுத்தை முடிவு செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் விரலில் இங்க் வைத்துக் கொண்டார் என்பதுதான் முக்கியமானது.. இது அவருக்கு இந்த நாடு கொடுத்த உரிமை.. அதை சரியாக நிறைவேற்றியுள்ளார் என்பதுதான் முக்கியமானது.
எத்தனை பெண்கள்.. ஆண்களே வெட்கப்படுங்கப்பா...
பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பெண்களைத்தான் அதிகமாக பார்க்க முடிந்தது. கணவரோடு வந்தவர்கள், அப்பா, அம்மாவோடு வந்தவர்கள், சகோதரர்களோடு வந்தவர்கள் என பெண்கள்தான் அதிகம். அத்தனை பேரிடமும் இன்னிக்கு நாங்கதாண்டா ராஜா.. ராணி.. என்ற பெருமிதம், கர்வம் மிகுந்த பார்வை... மிகுந்த சந்தோஷத்தோடு வாக்களித்து விட்டுப் போனார்கள்.
88 வயது சுப்புலட்சுமிப் பாட்டிக்கிட்ட......!
88 வயது சுப்புலட்சுமிப் பாட்டியிடம் இருக்கிற அந்த உணர்வு கூட நம்மவர்கள் பலரிடம் இல்லாதது ஆச்சரியம் மட்டுமல்ல பெரிய வேதனைதான். இவர் ஒரு தேர்தலையும் தவற விடாமல் வாக்களிப்பவராம். ஒரு தேர்தலையும் விட்டதில்லையாம்.. குரோம்பேட்டையைச் சேர்ந்த இவர் மதிமுக ஆதரவாளராம். இவரிடம் வாக்களிக்காத அத்தனை பேரும் இவரிடம் ....... நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
கொடுத்த விலை பெரியது.. பயன்படுத்துங்கள் மக்களே...
கட்சிகள் பணம் கொடுக்கலாம்.. வாக்களிக்க.. அது லஞ்சம். ஆனால், இந்த சுதந்திரத்தையும், வாக்குரிமையையும் பெற மக்களாகிய நாம் கொடுத்த விலை மிகப் பெரியது.. நமக்காக போராடியவர்களின் தியாகம் மிக மிகப் பெரியது.. அதைக் கூட பயன்படுத்த நாம் மறுப்பது .. அடுத்த தேர்தலிலாவது சரியா பயன்படுத்தி தலை நிமிர்ந்து நில்லுங்கள் நண்பர்களே...!