கடந்த ஆண்டை விட அதிகம் தேர்ச்சி பெற்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அபார சாதனை!
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5. சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2.5 சதவீதம் கூடுதலாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. முன்னதாக, தேர்வு முடிவுகள் ரேங்க் அடிப்படையில் வெளியிடப்படாது என்றும், மாணவர்களின் மன உளைச்சலை தடுக்க இந்த முயற்சி என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எந்த வித ஆரவாரமுமின்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் போல் சைலன்ட்டாக வெளியானது. இந்த முறையை பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 6,423 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 5,700 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரிசுகளை வழங்கினார்.
119 மாணவ-மாணவிகள் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 51 மாணவ-மாணவிகள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். 136 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 524 பேர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.