நடிகை நமீதா வீட்டை காலி செய்ய தடை - வீட்டு உரிமையாளருக்கு கோர்ட் உத்தரவு
வாடகை வீடு தொடர்பாக நடிகை நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை காலிசெய்யுமாறு மிரட்டுவதாக நமீதா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வீட்டு உரிமையாளருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நடிகை நமீதா. இவர் சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2004 ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். வீட்டின் உரிமையாளர் திடீரென வாடகை அதிக அளவில் உயர்த்தியதாகவும், அதனை கொடுக்க மறுத்தால் வீட்டை காலி செய்ய வீட்டின் உரிமையாளர் வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நியாமான வீட்டு வாடகை செலுத்தி வருவதாகவும், எனவே வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டில் இருந்து காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
வீட்டின் உரிமையாளர் தனக்கு பல விதமான தொந்தரவுகளை கொடுக்கிறார். வீட்டை நான் காலி செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்படுகிறார். மேலும் ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.
எனவே, அமைதியான முறையில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது. என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும். என்னை ரவுடிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகள் மூலமும் தொந்தரவு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். வாடகை வீட்டில் இருக்கும் நமீதாவை, வீட்டின் உரிமையாளர் காலி செய்வதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.