வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா?... சந்தேகம் தீர்த்த ஆட்சியர்!
சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக ஆட்சியர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இன்று காலையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க போயஸ் கார்டனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
காலை 8 மணி முதல் நடைபெற்ற இந்த ஆய்வின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நிலத்தை கையகப்படுத்தும் பணிகள்
ஆகஸ்ட் 5ல் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அறிவிப்பை அரசு ஆணையாக வெளியிட்டது. அந்த அரசாணைப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அளவிடும் பணிகள் நடந்தது
அதன் முதற்கட்டமாக வேதா நிலையத்தை கூட்டு ஆய்வு செய்யும் பணியை இன்று நடைபெற்றது. இந்த ஆய்வில் வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவையர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர்அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது வேதா நிலையத்தின் மொத்த நில அளவு, கட்டிடத்தின் பரப்பளவு போன்றவற்றை அளவிடும் பணிகள் நடைபெற்றது.
வருமான வரித்துறையினர் ஏன்?
வேதாநிலையத்தில் வருமான வரித்துறையால் 2 அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய ஆய்வு குறித்து முறையாக தகவல் தெரிவித்தோம். அதன் பேரில் வருமான வரித்துறையினரும் இன்றைய ஆய்வில் பங்கேற்றனர்.
சீலிடப்பட்ட அறைகளை திறக்கவில்லை
அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது வருமான வரித்துறையினர் சீல் வைத்த அறைகள் திறக்கப்படவில்லை. இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர் என்று அன்புச்செல்வன் தெரிவித்தார்.