ஓஎம்ஆர் சாலை மிதக்கிறது.. எத்திராஜ் கல்லூரி விடுதியில் மழை நீர் புகுந்தது... 700 மாணவிகள் தவிப்பு!
சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதியில் மழை நீர் புகுந்துள்ளதால் அங்கு தங்கியுள்ள 700 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: மாலையில் இருந்து பெய்து வரும் மழையால் சென்னையின் பல இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதியில் மழை நீர் புகுந்துள்ளதால் அங்கு தங்கியுள்ள 700 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் இன்று மாலையிலிருந்து சென்னை நகரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது.
ஏகப்பட்ட இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் மழை நீர் புகுந்தது. சென்னையில் 186 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டும் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நேற்றைய மழையில் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் அங்கு இருக்கும் எத்திராஜ் கல்லூரி பெண்கள் விடுதியில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் 700 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல ஐ.டி பணியாளர்களும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஓ.எம்.ஆர் சாலை வெள்ளக்காடாகி உள்ளது. எத்திராஜ் கல்லூரியில் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு உதவ அதிகாரிகள் விரைந்துள்ளார்கள் என்று அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா?
இதற்கிடையே, கனமழை பெய்து வருவதால் நாளை தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வியாழக்கிழமை மாலையில் இருந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நேற்று பணிக்குச் சென்ற ஊழியர்கள் வீடு திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அல்லது வீட்டில் இருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.