இழுத்து செல்லப்பட்ட வாகனங்களை தேடி அலையும் சென்னைவாசிகள்! சுனாமியை நினைவூட்டும் வெள்ளம்
சென்னை: கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுனாமியை மீண்டும் கண்முன் கொண்டுவருவதை போல உள்ளது.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தோனேஷியா அருகே கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பக்தின் அதிர்வால், கடல் திடீரென பொங்கி எழுந்து, சென்னைக்குள் புகுந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கின.
தற்போது பெய்துள்ள கனமழை மற்றும் ஏரி நீர் வெள்ளம் போன்றவற்றால், வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார்கள், பைக்குகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசித்தோர் நிறுத்தியிருந்த வாகனங்கள் நகரின் எங்கெங்கோ கொண்டு சென்று வீசப்பட்டுள்ளன. பல வாகனங்கள் ஈக்காடுந்தாங்கல் பகுதியில் ஒதுங்கியுள்ளதை பார்க்க முடிந்தது. வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை தேடிக்கொண்டு அங்கு வந்து குவிகிறார்கள்.
உடைபட்ட நிலையில் கிடக்கும் தங்கள் வாகனங்கள் எவை என்று தேடி அலைகிறார்கள். மழை வெள்ளம் இப்படி ஒரு சேதத்தை ஏற்படுத்துமா என்பதை அவர்களால், யூகித்தும் பார்க்க முடியவில்லை. இன்சூரன்ஸ் மூலம் நிவாரணம் பெறலாமா, இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் தருமா என்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு.
இதுகுறித்து இன்சூரன்ஸ் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது "காரோ, பைக்கோ, மழையால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால், அதை ஸ்டார்ட் செய்துவிட வேண்டாம். எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையை, இன்சூரன்ஸ் ஏஜென்டுகளிடம் காட்டுங்கள். ஸ்டார்ட் செய்துவிட்டால், பணம் தராமல் தட்டிக்கழிக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.