விடிய விடிய கொட்டிய மழை... தத்தளிக்கும் சென்னை- தவிக்கும் வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேடுபள்ளம் தெரியாமல் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் பாம்பு, உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொட்டிய கனமழை
சென்னையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியது. லேசாக தொடங்கிய மழை கனமழையாக மாறியது. விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு கனமழை பெய்தது.

புறநகரில் மழை
புறநகர் பகுதிகளிலும் கொட்டியதோடு, கல்பாக்கம், காஞ்சிபுரம், மாமல்லபுரம், திருப்போரூரிலும் இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

சாந்தோமில் வெள்ளம்
சென்னை சாந்தோம் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடக்கப்பட்டது. 3 அடி உயரத்திற்கு சாலையில் மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சாந்தோம் சாலையில் உள்ள சிக்னல் கம்பம் ஒன்றும் கனமழையால் சாய்ந்து விழுந்தது.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பெரும்பாலான முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலை பள்ளங்களில் சிக்காமல் இருக்க குறைந்த வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். விமான நிலையம் முதல் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரை சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தத்தளிக்கும் சென்னை
சென்னையில் தாம்பரம், பல்லாவரம், பரங்கிமலை, கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம், மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம். பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, மூலக்கடை, சர்மாநகர், கொருக்குப்பேட்டை, மணலி, மாதாவரம், மூலக்கொத்தளம், தங்கசாலை, புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், காசிமேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

கரைபுரண்ட வெள்ளம்
அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் தொடங்கி ஓட்டேரி கூவம் பாலம்வரை சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால், அப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் சாலைகளில் நிற்கின்றன.

ரயில்வே பாலத்தில் தண்ணீர்
தாம்பரத்தில் ரயில்வே தரைப்பாலம் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையில் தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மின்சார ரயில்கள் தாமதமாக செல்கின்றன. ஏராளமானோர் அலுவலகத்திற்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

வீடுகளுக்குள் தண்ணீர்
காஞ்சிபுரம் நகரில் பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. குறிப்பாக அரக்கோணம் சாலையில் பாரதி பஸ் டிப்போ மற்றும் பிள்ளையார்பாளையம் சந்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிய வழி இல்லாத காரணத்தால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாலாற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மதுராந்தகம் ஏரியும் நிரம்பியுள்ளதால் ஏரியில் தண்ணீர் திறக்கப்படும் என இப்பகுதியில் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அவதியில் மக்கள்
கனமழை காரணமாக திருவள்ளூர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வி.எம்.நகர், மா.பொ.சி. நகர், ஜெயா நகர், என்.ஜி.ஒ. காலனியில் வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications