நிலவேம்பு: முகாந்திரம் இருந்தா கமல் மீது கேஸ் போடலாம்.. ஹைகோர்ட் அதிரடி!
நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நிலவேம்பு விவகாரத்தில் முகாரந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த காய்ச்சலை தடுப்பதற்கு ஆங்கில மருத்துவத்தை விட சித்த மருத்துவமே சிறந்தது என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதன்படி டெங்குவிலிருந்து தங்களை பாதுகாக்க பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு அரசு அறிவித்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரின் ரசிகர்கள் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து வந்தனர்.
|
கமல் டுவீட்
இந்நிலையில் நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என்று ஒரு வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து நடிகர் கமல் கடந்த 18-ஆம் தேதி டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
|
நிறுத்துங்கள்
அதில் நிலவேம்பு கசாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக புரளி சுற்றி வரும் நிலையில் அந்த தகவல் குறித்த ஆழந்த ஆய்வு முடிவுகள் வரும்வரை தனது நற்பணி மன்றத்தார், நிலவேம்பு கசாயத்தை வழங்க கூடாது என தெரிவித்திருந்தார். இது பெரிதும் பேசப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்ற சமூக சேவகர் கடந்த 19-ஆம் தேதி ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தமிழக அரசு மீதான தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காக கமல் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருவதாகவும், நிலவேம்பு கசாயம் குறித்து பொய் தகவலை பரப்பியுள்ளார் என்றும், அவரின் டிவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்றும், வன்முறையை தூண்டியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
முகாந்திரம் இருந்தால்
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேவராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேவராஜனின் புகாரின் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம். மேலும் நிலவேம்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறைக்கும், சித்த மருத்துவத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மனு தள்ளுபடி செய்யப்படும்
அந்த ஆய்வில் நிலவேம்பு கசாயத்தால் எந்த பாதகமும் இல்லை எனில், நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்றும், ஏதாவது பாதகங்கள் இருந்தால் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.