உயரதிகாரிகளின் வீட்டில் எத்தனை காவலர்கள் வேலை பார்க்கின்றனர்- நீதிபதி கிருபாகரன் கேள்வி
காவல் துறை உயரதிகாரிகளின் வீடுகளில் எத்தனை காவலர்கள் வேலை பார்க்கின்றனர் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவல் துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளின் வீடுகளில் எத்தனை காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவலர்கள் மன அழுத்தம் தொடர்பாக பணியை கைவிடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது. அவர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும். 24 மணி நேரமும் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை. குடும்ப விழா, பண்டிகை காலங்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிப்பதில்லை.
நடைமுறைப்படுத்தவில்லை
காவல் துறையில் 19,000 காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மையா? மன அழுத்தம் காரணமாக காவலர்கள் பணியை கைவிடுகின்றனர் , இல்லாவிட்டால் தற்கொலை செய்கின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு காவலர்களுக்கு தனி ஆணையம் என்ற உத்தரவு என்னவாயிற்று, இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.
பதில் அளிக்க வேண்டும்
காவலர்களுக்கான ஆணையம் 6 ஆண்டுகளாக அமைக்கப்படாததால்தான் மரணங்கள் அதிகரித்தன. காவலர் ஆணையம் தொடர்பாக வரும் 19-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அரசாணை என்னவானது
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்காக எத்தனை காவலர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். ஆர்டர்லி முறை ஒழிக்கும் வகையில் 1979-இல் வெளியிட்ட அரசாணை என்னவானது.
காவலர்களுக்கும் பொருந்தும்
வரும் 22-ஆம் தேதிக்குள் அறிக்கையை உள்துறை செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும். மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, காவலர்களுக்கும் பொருந்தும்.
வித்தியாசமில்லை
காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே அப்பாவிகள் மீது கோபமாக மாறுகிறது. உஷா மரண விவகாரத்தில் மூல காரணம் கணவர் ஹெல்மெட் அணியாததுதான். பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி நிற்க வைக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி தெரிவித்தார்.