திருச்சி–காரைக்குடி நெடுஞ்சாலை பணிக்கு அதிமுக அரசு விதித்த தடையை ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: திருச்சியில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு அதிமுக அரசு விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிப் பாதையாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த சாலைப் பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருச்சி - காரைக்குடிக்கு இடையே 126 கி.மீ தூரத்துக்கு 4 வழி நெடுஞ்சாலை அமைக்க 2006-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 14 நீர் நிலைகளில் குளம், ஏரிகள் மேம்பாலம் கட்டுவதற்கு நிபந்தனையுடன் தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இப்பணி ரூ. 400 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நீர் நிலைகளில் மேம்பாலம் கட்டுவதற்கு வாங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
மேலும் இந்த நெடுஞ்சாலை பணியை மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிமுக அரசின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்தின்படி, 14 நீர் நிலைகளில் குறுக்கே மேம்பாலம் கட்ட 2006ம் ஆண்டிலேயே தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக தடையில்லாச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும் என கூறி தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திட்டப்பணிகளுக்காக சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் தடையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது. மேலும் அதிமுக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி. ராஜா, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த பணிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.