இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சென்னை ஹைகோர்ட் வக்கீல் தற்கொலை
சென்னை: இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர் பழைய வண்ணாரப்பேட்டையச் சேர்ந்தவர் பழச்சாறு கடை வியாபாரி சின்னதுரை. அவருக்கு 4 மகன்கள். அதில் 2வது மகனான சுந்தரலிங்கம்(34) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் சுந்தரலிங்கம். ஆனால் அவருக்கு வயது அதிகரித்துக் கொண்டே போவதால் அவருக்கு திருமணம் செய்தால் தான் அவரது தம்பிகளுக்கு திருமணம் நடக்கும் என்று நினைத்தார் சின்னதுரை.
இதையடுத்து சுந்தரலிங்கத்திற்கும் உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார் சின்னதுரை. ஜனவரி 22ம் தேதி நிச்சயதார்த்தம், 23ம் அதாவது இன்று திருமணம் என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். இது பிடிக்காத சுந்தரலிங்கம் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் சென்னை கோட்டை-கடற்கரை ரயில் நிலயைத்திற்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். உடலில் தீப்பிடித்தவுடன் வலி தாங்க முடியாமல் அலறினார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரலிங்கத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருமணம் பிடிக்காததால் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.