மது விற்பனைக்கு தடை கிடையாது.. அரசின் கொள்கை முடிவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு..
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்றும், அது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
பல குடும்பங்கள் பாதிப்பு
அதில் அரசியலமைப்பு சட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில், அரசே மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்வதால், பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி விசாரணை
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வக்கீல் முத்துராஜா, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜராகினர்.
பெண்களும் மதுவுக்கு அடிமை
மனுதாரர் வழக்கறிஞர், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பெருகி வருகிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள். பச்சிளம் குழந்தைகள்கூட பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக முழுவதும் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
டாஸ்மாக் கடைகள் குறைப்பு
அரசு தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதத்தில், ‘டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 2003-ம் ஆண்டு 7,800 மதுபானக் கடைகள் நடத்தப்பட்டன. மக்களின் நலன் கருதி தற்போது ஆயிரம் கடைகள் மூடப்பட்டு விட்டன. தற்போது 6,800 கடைகள் மட்டுமே உள்ளது.
விற்பனை நேரமும் குறைப்பு
முன்பு காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டது. பொதுமக்கள் நலனுக்காக இதை காலை 10 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே கடை திறக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மதுபானக் கடைகளுக்கு முன்பும் பெரிய அளவில் மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று எழுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நலனுக்கு நடவடிக்கை
தற்போது ஒரு பச்சிளம் குழந்தை மதுபானம் குடிப்பது போன்ற காட்சி வெளியானது. அந்த காட்சி மதுபானக் கடையில் எடுக்கப்படவில்லை. அந்த நபர்கள் மதுபானத்தை வீட்டுக்கு வாங்கிச் சென்று, குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்' என்று கூறினார்.
அரசின் கொள்கையில் தலையிட முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது.
மதுவைத் தடுக்க பிரச்சாரம்- நீதிமன்றம் யோசனை
மதுவின் கொடுமை குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். அதன்மூலம்தான் மதுவின் தாக்கத்தை பொதுமக்களிடம் இருந்து குறைக்க முடியும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.