கிராமசபை தீர்மானம் போட்டாலும் டாஸ்மாக் கடை திறக்க தடையில்லை - ஹைகோர்ட்டு தடாலடி!
கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினாலும் டாஸ்மாக் திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினாலும் உச்சநீதிமன்றம் விதிப்படி கடையை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொன்னேரி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி விக்னேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதன்படி மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பின்பற்றி அந்தப் பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டுதலின்படியே நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் மாற்று இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நெடுஞ்சாலைகளில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மாற்று இடத்தில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருபாகரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்பட்டால் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைகள் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றி தீர்மானம் செல்லாது என்ற தீர்ப்பை அளித்துள்ளது. எனினும் பொன்னேரி அருகே திறக்கப்பட்ட ஒரு கடைக்கு மட்டுமே கிராம சபை போட்ட தீர்மானம் செல்லாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக கிராம சபை கூட்டங்களில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.