சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தல்.. தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான 3 ஆயிரத்து 784 வாக்குகளில், 2,106 வாக்குகள் பெற்று தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
வக்கீல்கள் சங்கத் தேர்தல் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர பிரசாரம் நடந்தது. தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு 79 பேர் போட்டியிட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது. மொத்தமுள்ள 4,777 வாக்குகளில் 3 ஆயிரத்து 784 வாக்குகள் பதிவாகின. பின்னர், வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றிலிருந்தே முன்னிலை வகித்த மோகன கிருஷ்ணன் 6வது சுற்றின் இறுதியில் 2,106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அறிவழகன் 1,102 வாக்குகள் பெற்றார். இதைதொடர்ந்து, 1014 வாக்குகள் வித்தியாசத்தில் மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் புதிய தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினார்கள்.