சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஹைகோர்ட்!
சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை நீலகிரி நீதிமன்றம் விசாரிக்க சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு சென்னை ஹைகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 8 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நடிகர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை வழக்கை விசாரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications