ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் வருகை... சென்னையில் கோடையில் குடிநீர் பஞ்சமிருக்காது!
சென்னை: ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் வருகையால், இக்கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இல்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலம் தொடங்கினாலே வாட்டும் வெயிலைப் போலவே, மக்களை மிரட்டும் மற்றொரு விஷயம் குடிநீர் பஞ்சம். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன.
அதேபோல், மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெமிலி கடல் நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து தென்சென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கொளுத்தும் வெயிலால் ஏரிகளின் நீர்மட்டம் குறைவது வழக்கம். ஆனால், மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஆந்திராவில் இருந்து கிருஷ்ண்ணா நீர் வந்து கொண்டிருப்பதால் இம்முறை கோடையில் குடிநீருக்காக மக்கள் திண்டாட வேண்டி இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இருப்புக் குறைவு....
கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி நிலவரப்படி, 2,009 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் இருப்பு இருந்த புழல் ஏரியில், தற்போது 1,792 மில்லியன் கன அடியாகவும், 96 மில்லியன் கன அடி கொள்ளளவு இருப்பு இருந்த சோழவரம் ஏரியில், தற்போது 11 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பாக குறைந்துள்ளது.
வேண்டுகோள்...
இதனால், தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டின் திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி, கேட்டுக்கொண்டனர்.
பூண்டியை அடைந்தது...
அதன்படி, கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி மாலை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை கடந்த மார்ச் 31-ந்தேதி வந்தடைந்து, ஏப்.1-ந்தேதி பூண்டி ஏரியை அடைந்தது.
நீர்வரத்து...
தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 440 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 267 கன அடியும், கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
நம்பிக்கை...
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் குறைந்திருந்தாலும், கிருஷ்ணா நீர் வருகை மற்றும் நெமிலி, மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாலும் சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணா நதி நீர்....
மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி, ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 8 டி.எம்.சி.(8 ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீரும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதிக்குள் 4 டி.எம்.சி.(4 ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன்படி, தற்போது கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
உயரும் நீர்மட்டம்...
கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 202 மில்லியன் கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 740 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. கிருஷ்ணா நீர் வருகையால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் 68 மில்லியன் கன அடி உயர்ந்து, 270 மில்லியன் கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 124 மில்லியன் கன அடியாக உயர்ந்து, 864 கன அடியாகவும் உள்ளது.
குடிநீர் பற்றாக்குறை இருக்காது...
கடலூரில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் குழாய் மூலம் சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட உள்ளது. எனவே சென்னை நகரில் கோடையை சமாளிக்க போதுமான தண்ணீர் இருப்பதால், குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தண்ணீர் சப்ளை...
சென்னை நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், குடிசைவாசிகள் அதிகம் வசிக்கும் பகுதிகள், குடிநீர் குழாய் பதிக்காத பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் 3,600 நடை தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது' என இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.