சென்னையில் மினி பஸ்: முதல்வர் துவக்கி வைத்தார்… வழித்தடங்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் மினி பேருந்து சேவையை முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். மூலக்கடையில் இருந்து மணலிக்கு செல்லும் பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னையில் இதுவரை பஸ்கள் செல்லாத இணைப்பு சாலைகளில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக, 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த பேருந்துகளில் ஓட்டுனர், நடத்துனர் உட்பட 27 பேர் பயணிக்கலாம். ஏற்கனவே பஸ்கள் ஓடாத இணைப்புச் சாலைகளில்தான் இந்த பஸ்கள் இயக்கப்படும்.
பிரதான சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இந்த சிறிய பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறிய பஸ்களின் தொடக்க விழா, சென்னையில் இன்று காலை 11 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த 50 சிறிய பஸ்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களுக்கான 610 புதிய பஸ்களையும் இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
வழித்தடங்கள்
சென்னையில் புதிதாக இயக்கப்பட உள்ள மினி பேருந்துகளின் வழித்தடங்கள்:
ராமாபுரத்தில் இருந்து போரூருக்கும், மூலக்கடையில் இருந்து மணலிக்கும், மாதவரத்தில் இருந்து ரெட்டெரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கிண்டியில் இருந்து கீழ்கட்டளை, என்.ஜி.ஓ. காலனிக்கும், எஸ்.ஆர்.பி.யில் இருந்து மேட்டுக்குப்பத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், அசோக்பில்லரில் இருந்து மேதாநகருக்கும், வடபழனியில் இருந்து கோயம்பேடுக்கும் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் பல்லாவரத்தில் இருந்து திரிசூலத்துக்கும், குரோம்பேட்டையிலிருந்து மேடவாக்கம், மாடம்பாகத்திற்கும் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.