ரூ. 6 லட்சம் கடனுக்கு வட்டியோடு ரூ. 36 லட்சம் திருப்பிக் கேட்ட கந்துவட்டிக்காரர் கைது
சென்னை: சென்னையில் ரூ.6 லட்சம் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.36 லட்சம் திருப்பிக்கேட்ட கந்துவட்டிக்காரரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை நேரு நகரைச் சேர்ந்த திலகவதி (31) என்பவர், தனது குழந்தைகளின் படிப்பு செலவுக்காக நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரிடம் கடந்தாண்டு கடன் வாங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டுப் பத்திரத்தை சுடலையிடம் அடமானமாக திலகவதி கொடுத்துள்ளார்.
திலகவதியிடம் கடன் தொகையாக ரூ. 6 லட்சத்தை மட்டுமே கொடுத்த சுடலை, தனது கணக்குப் புத்தகத்தில் வட்டியுடன் சேர்த்து ரூ. 12 லட்சம் கொடுத்ததாக கணக்கு எழுதி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிறகு வெவ்வேறு காலகட்டத்தில் திலகவதி திருப்பிக் கொடுத்த ரூ.2 லட்சத்தையும் வட்டியாகவே சுடலை கணக்கில் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், தொடர்ந்து கடனைக் கட்ட முடியாமல் திண்டாடிய திலகவதி தனது வீட்டை விற்பது என முடிவெடுத்தார். இதற்காக தனது வீட்டு பத்திரத்தை திருப்பித்தரும்படி, சுடலை கண்ணுவிடம் திலகவதி கேட்ட போது, தனக்கு ரூ.36 லட்சம் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திலகவதி, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து கந்து வட்டிக்கொடுமை புரிந்த சுடலைக்கண்ணு நேற்று கைது செய்யப்பட்டார்.
கிராமத்தில் விவசாயம் செய்து வந்த சுடலைக்கண்ணு, கந்து வட்டி தொழிலில் லட்சம், லட்சமாக சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகி விட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.