வெள்ளத்தில் சிக்கிய புத்தாண்டு... பொங்கலைத் தெறிக்க விட பிளான் பண்ணும் சென்னை மக்கள்
சென்னை: மழை, வெள்ளத்தால் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களையிழந்து விட்டதால், பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர் சென்னை மக்கள்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது. கடந்தமாதம் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.
நிவாரணம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்து சேர்ந்தன. நிவாரணப் பொருட்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பினர்.
களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்...
வெள்ளத்தால் பெரும் சோகத்தைச் சந்தித்ததால், சென்னையில் இந்தாண்டு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்தன கிறிஸ்தவ ஆலயங்கள். இதனால், புத்தாண்டையொட்டி வண்ண விளக்கு அலங்காரமும் செய்யப்படவில்லை.
புதிய வாழ்க்கை...
இந்நிலையில், மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். வெள்ளம் வடிந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பி, வீடுகளைச் சுத்தப்படுத்தி மீண்டும் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
முன்கூட்டியே போகி...
வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது, போகியன்று வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு, வீட்டிற்கு வெள்ளையடிப்பது வழக்கம். ஆனால், இம்முறை வெள்ளம் காரணமாக கடந்தமாதமே மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கி விட்டனர்.
வர்ணம் பூசும் பணி...
வெள்ளத்தில் ஊறிய வீட்டு உபயோகப் பொருட்களைத் தூக்கி வெளியில் வீசி வருகின்றனர். இதேபோல், வெள்ளத்தால் சேறு அப்பிய சுவர்களுக்கும் அவர்கள் வர்ணம் பூசி வருகின்றனர்.
சோகங்களுக்கும் போகி...
இதனால், வெள்ளம் பாதித்த பல பகுதிகளில் வீடுகள் புதிய பொலிவுடன் உருமாறி வருகின்றன. வீடுகளைப் போலவே மக்கள் தங்கள் மனதில் இருந்த சோகங்களுக்கும் போகி கொண்டாட முயற்சித்து வருகின்றனர்.
புத்துணர்ச்சி...
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்' என எதிர்காலத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர் மக்கள். இது புத்துயிர் பெற்று வரும் அவர்களது வீடுகளைப் போலவே, அவர்களது முகத்திலும் தெரிகிறது.
பொங்கல் ஏற்பாடு...
இதனால் வரும் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட தேவையான ஏற்பாடுகளை மக்கள் செய்து வருகின்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி வருகின்றனர்.