சென்னை அடையார் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை: சென்னை அடையார் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையார் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கப் போவதாக நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் அடையாறு கஸ்தூரிபா ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் முருகன், இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அடையாறு கஸ்தூரிபா ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த மூன்று செல்போனில், ஒன்றிலிருந்து தான் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்நபரைப் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப் பட்ட நபர் தாம்பரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்றும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் கண்டு பிடிக்கப் பட்டது.
திருட்டு செல்போனில் பேசியபோது விக்னேஷைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.