சென்னை கொளத்தூர் நகைக்கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேல்சுவரை துளையிட்டு தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தானுக்கு மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்றனர். நாதுராமை பிடிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார், பெரியபாண்டியனை சுட்டது சக காவல் ஆய்வாளர் முனிராஜ் என்று ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.
ஆனால் நாதுராம் தான் பெரியபாண்டியனை சுட்டான் என்று சென்னை போலீஸ் சந்தேகிக்கிறது. இதனிடையே கொள்ளையன் நாதுராம் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நாதுராமின் கூட்டாளிகள் பத்தாராம், தினேஷ் சவுத்ரியையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.