பான் மசாலா வியாபாரிகளிடம் மாமூல்.. போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை.. அரசுக்கு சென்னை கமிஷனர் கடிதம்
தடை செய்யப்பட்ட பான் மசாலா வியாபாரிகளிடம் பல லட்சம் லஞ்சமாக பெற்று பிழைப்பு நடத்தி வந்த சென்னை நகர போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளா
சென்னை: சென்னையில் பான் மசாலா போதை பொருள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, இதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடோன்களில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுக்கு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் புகாரில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்த 5 ஆண்டு காலமாக நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த நேரடி விற்பனைக்கு சென்னை மாநகரத்தில் பணிபுரியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு மாதம், மாதம் மாமூலாக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த ரகசிய டைரியை அதிரடி சோதனையில் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப பணம் வழங்கப்படுவதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த கடிதத்தில் சென்னை மாநகரத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இருப்பதாக கூறப்பட்டு இருந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தார்.
அப்போதைய டிஜிபி அசோக் குமார், தற்போது உயர் பதவியில் இருக்கும் உயர் அதிகாரி மீது புகார் கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட அதிகாரிகளை டிஜிபி அசோக் குமார் காட்டி கொடுத்ததால், அவர் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து நேர்மையான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து மாமூல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாதந்தோறும் பல லட்சம் அளவு பணத்தை போலீஸ் அதிகாரிகள் மாமூலாக பெற்ற தகவல் வெளி வந்தால் தற்போது பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, பான் மசாலாவுக்கு தடை விதித்தார். பான் மசாலா உபயோகிப்பதால் வாய் புற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. சிறுவர்களும் வயது கோளாறு காரணமாக அதிகம் வாங்கி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரிந்தும், பணத்தை பெற்றுக்கொண்டு, சில போலீசார் இந்த அநியாய வியாபாரத்தை அனுமதித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.











Click it and Unblock the Notifications