காலையில் சுள்ளுன்னு வெயில்... மாலையில் வெளுத்து வாங்கும் மழை... இதுதான் சென்னை வானிலை
சென்னை: கடந்த பத்து நாட்களாக லீவ் போட்டுவிட்டு போயிருக்கும் சூரியன் இன்றைக்காவது தலையை காட்டுவாரா என்று ஏங்கித்தவித்த சென்னைவாசிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் எட்டிப்பார்த்தார் சூரியபகவான். காலையிலேயே வெயில் சுள்ளென்று அடித்தது. காலையில வெயிலடிக்குதேன்னு நம்பி துணியை காயவைத்த இல்லத்தரசிகளின் மனதில் இடியை இறக்கியது மாலை நேரத்தில் பெய்த மழை.
சென்னையில் பிற்பகல் முதல் இரவு வரை, நான்கு மணி நேரத்தில், 8.5 செ.மீ. மழை கொட்டியது. மழை நீர் வௌ்ளமென சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. கனமழை பெய்யும்னு ரமணன் சொன்னாருதான்.... ஆனா இவ்ளோ மழை பெய்யும்னு சொல்லலையே என்று நினைத்தவாரே நனைந்த துணிகளை எடுத்து வந்து மறுபடியும் வீட்டிற்குள் காயவைக்க வேண்டியதாக போனது.
படகுப் போக்குவரத்து
தமிழகத்தில் கடந்த 9ம்தேதி முதல் 15ம்தேதி வரை இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை துவைத்து தொங்கவிட்டு விட்டது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் பலரும் படகுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளனர்.
பாடாய் படுத்தும் மழை
சென்னை நகரில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை அளவு பதிவானது. சென்னை நகரின் மைய பகுதிகளான அண்ணாநகர், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட பல இடங்களிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, மணப்பாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம் உள்பட பல இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.
இருள்சூழ்ந்த சென்னை
கன மழையால், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார், நங்கநல்லுார், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, அடையாறு, திருவான்மியூர், பாலவாக்கம், கண்ணகி நகர், துரைப்பாக்கம், பெருங்குடி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சாந்தோம், சீனிவாசபுரம், ராயபுரம், திருவொற்றியூர், எண்ணுார் ஆகிய பகுதிகளில் விபத்து ஏற்படாமல் இருக்க, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இயல்பு நிலை திரும்பலையே
மழை குறைந்து, அவ்வப்போது வெயில் தலைக்காட்டியதாலும் வில்லிவாக்கம், அண்ணாநகர், முகப்பேர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம் உள்பட இடங்களில் குளம் போல் தேங்கிய மழைவெள்ள நீர் வடிய தொடங்கியது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்தநிலையில் கடந்த இரண்டுநாட்களாக கொட்டிய கனமழையால் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
எட்டிப்பார்த்த சூரியன்
சென்னையில் ஞாயிறு இரவு முழுவதும் மழை பெய்ததால், காலையிலும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, காலையில் வானம் மேகமூட்டத்துடன் மழை வரும் சூழ்நிலையில் காணப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மேகமூட்டம் மறைந்து, சூரியன் தலைக்காட்டியது.
பின்னர் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பிற்பகல் இரண்டரை மணி வரை வெயிலின் தாக்கம் வாட்டியது. இதனால் மழை வராது என்று பெரும்பாலான இல்லத்தரசிகள் துணிகளை துவைத்து காய வைத்தனர்.
கருமேகங்கள் சூழ்ந்த சென்னை
திங்களன்று பிற்பகலில் சென்னையில் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது. சூரியன் மறைந்து கருமேகங்கள் சூழ்ந்தது. நான்கு மணிக்கெல்லாம் சென்னை நகரம் இருள் சூழந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை ஓட்டினர். சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
நம்பி போனோமே
மழைத்துளிகள் ஊசிபோல கொட்டியதால் 10 அடி தூரத்துக்கு மேல் சாலைகளை தெளிவாக காண முடியவில்லை. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் குடை பிடித்து சென்றவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர். இனி மழை வராது என்று நம்பி துணி காய வைத்த பெண்களும், ரெயின் கோட், குடை எடுக்காமல் அலுவலகம் சென்றவர்களும் அப்படியே நனைந்து நாறிப்போய் வீடு திரும்பினர்
ரோடா? குளமா?
அண்ணாசாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதில் ரோடு எங்கே இருக்கு பள்ளம் எங்கே இருக்கு... இதுல மெட்ரோ ரயில் வேலையும் நடக்குமே அந்த தடுப்புச்சுவர் எங்கே இருக்கு என்று தடுமாறியபடியே உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாகனம் ஓட்டிக்கொண்டு வீடு போய் சேர்ந்தனர் பலர்.
போக்குவரத்துப் போலீசார்
ஊர்ந்து சென்ற வாகனங்களை சமாளித்து, முழங்கால் அளவு மழைநீரில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்குள் டிராபிக் போலீசாரின் பாடு படுதிண்டாட்டமாகத்தான் போய்விட்டது. ஆனாலும் நேற்று சென்னையில் பெய்த பேய்மழையால் போக்குவரத்து முடங்கித்தான் போனது.
அதிர்ச்சியில் சென்னைவாசிகள்
சென்னை நகரை மீண்டும் மிரட்டும் மழையால் விரக்தியடைந்துள்ளனர். மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி, குடிநீர்-கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். மணப்பாக்கம், மவுலிவாக்கம், நெற்குன்றம், முகலிவாக்கம் எல் அன்ட் டி காலனி, சி.ஆர்.ஆர்.புரம் உள்பட பல பகுதிகளில் ஏற்கனவே சூழப்பட்ட மழைவெள்ள நீர் வடியாமல் சூழ்ந்திருக்கும் வேளையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் தேங்கிய வெள்ளநீரின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
குஷியில் மாணவர்கள்
சென்னை நகரை மீண்டும் மிரட்டும் மழையால் மக்கள் கடும் இன்னல் அடைந்தாலும், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தைகள் குதூகலத்தில் உள்ளனர். சூரியன் எட்டிப்பார்த்தலே... நாளைக்கு ஸ்கூல் திறந்துடுவாங்களோ? அப்போ மழை அவ்ளோதானா என்று ஆதங்கப்படுகின்றனர். இன்றைக்கும் காலையில் இருந்து வெயிலடிக்கிறது.... ஆனால் நம்பி துணியை காயவைக்கலாமா? மறுபடியும் மழை இருக்குன்னு ரமணன் சொல்லிருக்காரே? என்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இல்லத்தரசிகள்.