முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, வெளிநாடுகளில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
மாநாட்டையொட்டி, சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
5 அடுக்கு பாதுகாப்பு...
மாநாடு நடைபெறும் வர்த்தக மையத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் உள்பட 3000க்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். சென்னை வர்த்தக மையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. அதிவிரைவு படையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் நிபுணர்கள்...
18 தனிப்படை கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநாட்டு வளாகத்தில், மின்சாரம் தடைப்படாமல் கண்காணிக்க, 200 மின் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு பாதுகாப்பு...
தொழிலதிபர்கள் தொடர்ந்து சென்னைக்கு வந்த வண்ணம் இருப்பதால் சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தொழிலதிபர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து ஏற்பாடுகள்...
மாநாடு நடக்கும் இடத்துக்கு வெளிநாட்டு தொழிலதிபர்கள் வந்து செல்ல, 'ஏசி' வால்வோ பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் நந்தம்பாக்கம், போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடையாள அட்டை...
பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு, புகைப்படத்துடன் கூடிய, சிவப்பு கோடிட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கும், தனியார் நிறுவனத்தினருக்கும், பச்சை மற்றும் காபி நிற, கோடிட்ட புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள், வர்த்தக அரங்குக்குள் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.