தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - 6 நாட்களாக தவிக்கும் புறநகர் வாசிகள்
விட்டு விட்டு கனமழை கொட்டுவதால் புறநகர் பகுதிகள் தொடர்ந்து 6 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னை: வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் புறநகர் பகுதிகள் ஆறாவது நாளாக வெள்ளத்தில் மிதக்கின்றன. ஒரே ஆறுதல் கடந்த 2015ஆம் ஆண்டைப்போல இந்த ஆண்டு தண்ணீரில் வீடுகள் மூழ்கிப்போகவில்லை என்பதுதான்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து 6வது நாளாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால்
புறநகரில் ஆறுகள் தெருக்களில் ஓடுகின்றன. பல பகுதிகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்கிறது.
திங்கட்கிழமையில் இருந்தே மழை கொட்டி வருகிறது. முதல்நாள் மழைக்கே சென்னை புறநகரை வெள்ளம் சூழ்ந்தது. மணிமங்கலம், மண்ணிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரனை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய தாழ்வான பகுதிகள் எல்லாமே வெள்ள நீரினால் சூழ்ந்துள்ளது.
பகலில் மழை குறைந்து வெயில் தலைகாட்டினாலும்இரவு நேரங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. வியாழக்கிழமை பெய்த பேய்மழை புறநகரை புரட்டிப்போட்டு விட்டது.

தவிக்கும் புறநகர் மக்கள்
சென்னை, மயிலாப்பூரில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 செ.மீ. அளவுக்கு மேல் மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள 10 லட்சம் குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தண்ணீர் சூழ்ந்த புறநகர்
வேளச்சேரி, ராம்நகர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளே கண்களுக்குத் தெரியவில்லை. தண்ணீர் 2 அடி முதல் 3 அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. ஏராளமான குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீடுகள் அனைத்தும் மூழ்கியது.

படகு ஓடும் சாலைகள்
முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக பேரிடர் மீட்பு குழு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் மீட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் தேங்கிய தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டாலும், பல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து உள்ளது.

வெளியேறிய மக்கள்
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீர் வடிந்தால் மட்டுமே மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் நிலை உள்ளது.அதேபோன்று தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள பல லட்சம் வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.

கடந்த 2015ல் கற்ற பாடம்
தரைத்தளத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். முதல் தளத்தில் உள்ளவர்கள், தெருக்களில் தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு மீண்டும் வீடுகளுக்கு சென்று அங்கேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொற்றுநோய் பாதிப்பு
வேளச்சேரி, கோவிலம்பாக்கம், வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுவதால் சுகாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு பாதித்த பெருவெள்ளம் பலருக்கும் கண் முன்னால் வந்து போகிறது.












Click it and Unblock the Notifications