ஜெ. நலம்பெற வேண்டி அப்பல்லோ முன்பு சிறுவர், சிறுமிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி, சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான சிறுவர், சிறுமிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 26 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி, அஞ்சன் திரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு அப்போலோ மருத்துவமனை பின்புறம் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் சுகுமார் இந்த பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். இவர், ஜெயலலிதா குணமடையும் வரை அப்பல்லோவில் இருந்து செல்வோருக்கு ஆட்டோ இலவசம் என்று இலவசமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பின்னர், அப்பல்லோ வருவோருக்கு இலவசமாக இளநீர் கொடுத்தார். அடுத்தகட்டமாக இன்று சிறுவர், சிறுமிகளை வைத்து பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
முன்னதாக இன்று காலை அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு தேங்காய் உடைத்து பிரார்த்தனை நடத்தினர். அதேபோல் முதல்வர் நலம் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளும் பிரார்த்தனை செய்தனர்.












Click it and Unblock the Notifications